Saturday, November 26, 2011

எமது தொழிற்கலைகளை பேணுதல், ஆவணப்படுத்தல், புத்தாக்கல்

எமது வாழ்வாதாரமாக விளங்கும் எமது தொழிற்கலைகளை நாம் தகுந்த மதிப்புத் தந்துப் பேணவில்லை, அவற்றில் புத்தாக்கம் செய்யவில்லை. மாற்றாக தொழில்களில் ஏற்றம் இறக்கம் காட்டி திறமைகளை சிறுமைப்படுத்தினோம். தொகை தொகையாக இலக்கியம் படைத்த தமிழ்ச் சமூகம், ஒரு சில தொழிற்கலை ஆவணங்களைத் தானும் உருவாக்க வில்லை. இப்போ, அந்தக் கலைகள் எல்லாம் காலவதியாகி விட்டன. அவற்றால் ஒரு பயனும் இல்லை. எனவே அவை அழிவதே இயல்பு என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

அந்தக் கலைகள் எல்லாம் காலவதியாகி விட்டன என்பது ஒரு பெரும் பொய். இன்றும் இன்னும் பல மில்லியன் தமிழர்கள் கலப்பையால் உழுத அல்லது கையால் நாத்து நடப்பட்ட அரிசியையே உண்ணுகிறார்கள். இன்றும் இன்னும் பல்லாயிரக்கணக்காண தமிழர்கள் கரைவலையால் இழுக்கப்பட்ட மீன்களையே உண்ணுகிறார்கள். இன்றும் இன்னும் உள்ளூரில் மரவேலைக்கலை உயிர்ப்புடன் இருக்கிறது. உலோகக் கலை, நெசவுக்கலை, கட்டிடக்கலை, பல்வேறு கைத்தொழில்கள் என்று பல தொழிற்கலைகள் இன்றும் இன்னும் எமக்கு வாழ்வாதரமாக இருக்கின்றன. இவை வாழ்வாதரம் மட்டும் அல்ல எமது அடையாளமும் கூட. ஆனால் நாம் இவற்றைப் பேணுவது பற்றியோ, ஆவணப்படுத்துவது பற்றியோ சற்றும் அக்கறை அற்றவர்களாகவே இருக்கிறோம்.

நாம் ஏன் இவற்றை மதிப்பதில்லை. யேர்மனியர்களைப் போல், யப்பானிர்களைப் போல் நாம் ஏன் தொழிற்கலைகளை, தொழிற் கலைஞர்களை மதிப்பதில்லை. சாதியம் எம்மீது நடத்திய அட்டூளியத்தின் பாதிப்பா. அல்லது உலகமயமாதலால் நாம் எல்லோரும் முதலாளிகள் ஆகிவிடலாம் என்ற மாயையாலா. அலுவலக வேலை உயர்ந்தது, கைத்திறன் வேலை தாழ்தந்து என்ற எமது போலிச் சமூகச் சட்டகமா. இந்த மனநிலையின் அபத்தத்தை புகலிட நாடுகளில் இன்னும் விகாரமாகப் பார்க்கலாம். அங்கு சராசரி அலுவலக ஊழியரை விட சாராசரி தொற்கலைஞர், ஒர் இயந்திரவியலாளர், ஒரு கட்டுமானக் கலைஞர், ஒரு மரவேலைக்காரர் அதிக ஊழியம் பெறுகிறார். ஆனால் எமது சமூகத்தில் இந்தத் தொழிகளுக்கு மதிப்பு இல்லை.

இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர் நிலப்பரப்புக்களில் பெரும்பகுதி கடற்கரையை அண்டியவை. அதனால் இயல்பாக மீன்பிடிப்பு மற்றும் கடற்தொழில்களில் தமிழர்கள் அதிகம் ஈடுபட்டுவந்துள்ளார்கள். கடல் பற்றிய அறிவு, அதில் உள்ள உயிரினங்கள் பற்றிய அறிவு, அவற்றைப் பிடிப்பதற்கான பல்வேறு பொறிகள், வலைகள், தூண்டில்கள், கலவைகள் போன்ற கருவிகளின் தொழில்நுட்ப அறிவு எம்மிடம் உண்டு. கட்டுமரத்தில் இருந்து பல்லாயிர படைவீரர்களை பல மைல்கள் ஏற்றி இறக்கிய பெரும் கப்பல்கள் கட்டிய கப்பற்கலை என்று எமது அறிவு பரந்து இருந்தது. அண்மை வரை கப்பல் கட்டுவதில் நாம் பல புத்தாக்கங்களை செய்திருந்தோம். ஆனால் இவற்றை நாம் இன்னும் விரிவாக ஆவணப்படுத்தவில்லை, பேணவில்லை.

பல போதாமைகள் இருந்தாலும் ஒரு சில முயற்சிகளை இங்கு அடையாளப்படுத்துவது நன்று. தமிழ்நாட்டிலேயே பல்கலைக்கழகளுக்கான சிறந்த வலைத்தளங்களில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் இணையத் தளமும் (http://agritech.tnau.ac.in/ta/) ஒன்று. இங்கு வேளாண்மை, மீன்பிடிப்பு, கால்நடை, வனவியல் போன்ற பல துறைகளில் விரிவான கட்டுரைகளும் தகவல்களும் தமிழில் கிடைக்கிறன. கடந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி நடத்திய போது பல மாணவர்கள் பிரதி செய்து அனுப்பி இருந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை இந்த வலைத்தளத்தில் இருந்துதான் வந்திருந்தன. (வேளாண் தளம் பற்றி ஒரு தனிக் கட்டுரை எழுதவேண்டும்.) இதே போல ஒரு பொறியல் பல்கலைக்கழகம், ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் செய்தால் அதனால் கிடைக்கும் பலன்களை எண்ணிப் பாருங்கள். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிலும் நாம் இயன்றவரை இவ்வாறான தகவல்களைத் தொகுக்த்து வருகிறோம். நூலகத் திட்டத்திலும் இந்தவகை அறிவை ஆவணப்படுத்துவதை ஒரு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார்கள்.

இதில் நீங்களும் உங்கள் பங்களிப்பைச் செய்யலாம். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு உள்ளூர் கருவியைப் பற்றி, தொழில் நுட்பத்தைப் பற்றி, தொழிலைப் பற்றி, தொறிற் கலைஞரைப் பற்றி, அது சார்ந்த பரந்த அறிவைப் பற்றி ஒரு படம், நிகழ்படம், ஒலிப் பதிவு அல்லது கட்டுரை என்று வழங்குங்கள். இவ்வாறு நாம் கூட்டாக இவற்றைப் பேணுவோம், வளர்த்தெடுப்போம்.

Monday, November 14, 2011

தமிழ் விக்கி ஊடகப்போட்டி!



இந்த போட்டி பற்றிய விபரங்களை அறிய இங்கே செல்லுங்கள்.