Saturday, February 26, 2011

பன்மொழி ஆற்றலின் பயன்கள்

தமிழ்நாட்டிலும், புகலிட நாடுகளிலும் வீட்டிலோ, வேலையிலோ, உறவினர்களோடோ, நண்பர்களோடோ, இதர தமிழர்களோடோ தமிழர்கள் தமிழ் பேசுவது அருகி வருகிறது. தமிழில் கல்வி, தாய்மொழிக் கல்வி போய், தற்போது தமிழ் கல்வியே வேண்டாம் என்று தமிழ்நாட்டில் பலர் வேண்டி நிற்கின்றனர். தமிழ் கல்வி ஒன்றுக்கும் உதாவாதது. தமிழ் கல்வி மாணவர்களுக்கு சுமை சேர்க்கும் என்பது பலரின் வாதம். ஆங்கிலமே கல்வியில், வணிகத்தில், உலகமயமாதலில் ஆதிக்கம் செலுத்துவதால் அது மட்டுமே கற்பது, அதிலேயே அறிவுப் புலத்தை உருவாக்குவது போதுமானது என்பது தற்போது வேகமாக தமிழ்ச் சமூகத்தில் முன்னெடுக்கப்படும் கற்பிதம் ஆகும். இது தொலைநோக்கற்ற, குறுகிய, கேடு தரக்கூடிய பார்வை ஆகும்.

முதலில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் தாய்மொழி அல்லது பன்மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் கற்பதே அவர்களின் வருங்காலத்துக்கு நல்லது என்ற கருத்து தவறானது. பல சீரிய ஆய்வுகள் குழந்தைகள் இரு மொழிகளைக் கற்பதால் அவர்களின் பல்வேறு ஆற்றல்கள் விருத்தி பெறுவதை எடுத்துக் காட்டி உள்ளன. ஒப்பீட்டளவில் இரு மொழிகளைக் கற்கும் குழந்தைகளின் கவனிப்பு ஆற்றல் மற்றக் குழந்தைகளை விட மேன்மையாக இருக்கிறது. அவர்களின் சிந்திக்கும் ஆற்றலுக்கும் உதவி செய்கிறது. சிந்தனைகளை மொழியில் இருந்து பிரித்து, நுண்புலமாக சிந்திக்க பன்மொழி ஆற்றல் உதவுகிறது. வெவ்வேறு பண்பாட்டு மொழிச் சூழலில் பல விடயங்களைப் பொருத்தி ஆராய பன்மொழி ஆற்றல் உதவுகிறது. இவருக்கு தமிழ் விளங்கும் ஆனா கதைக்க மாட்டார், அல்லது வாசிக்க மாட்டார் போன்ற மொழி ஆற்றலை இங்கு குறிப்பிடவில்லை.

ஒருவருக்கு அவரின் அடையாளம் என்பது முக முக்கியமானது. தமிழர்களைப் பொருத்த வரையில் அவர்களின் அடையாளம் அவர்களின் மொழியோடு பின்னிப் பிணைந்தது. எமது வரலாறு, இலக்கியம், அறிவு எமது மொழியிலேயே பொதிந்து கிடக்கிறது. இந்த அடையாளத்தை ஒருவருக்குத் தருவதில் தமிழ் மொழி அவசிமாகிறது. இரண்டாம் மொழி சிங்களமாக, மலாயாக, ஆங்கிலமாக, இந்தியாக இருக்கலாம், ஆனால் தமிழில் பேச, எழுத, வாசிக்கத் தெரியாமல் தமிழர் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. தமிழ், தமிழர் என்று உண்மையாக உழைக்கும் பலர் கூட இந்த அடிப்படையை உணராமல் தமது பிள்ளைகளை அன்னியர் ஆக்குகிறார்கள்.

இன்று ஆங்கிலம் கற்பவர்கள் வணிகத்திற்காகவே பெரும்பாலும் கற்கிறார்கள். ஆனால் பொருளாதார உலகம் வேகமாக மாறி வருகிறது. சீனா, மத்திய கிழக்கு நாடுகள், யப்பான், உருசியா, செருமனி, பிரேசில், எசுபானிய நாடுகள், மலேசியா, இந்தோனேசியா, இந்தியா என வெவ்வேறு மொழிகளின் உலகங்களின் விரிந்து வருகின்றன. எனவே ஆங்கிலத்தைத் தாண்டி சீனம், அரபு, யப்பானிசு, உருசியன், யேர்மன், போர்த்துக்கீசு, எசுபானிசு, இந்தி என பல மொழிகளைக் கற்பதும் தேவையாகிறது. எனவே ஆங்கிலம் மட்டும் என்பது போதுமானது அல்ல.

தமிழ்த் திரைத்துறை, இசைத்துறை, பதிப்புத்துறை, கல்வித்துறை என தமிழ் மொழி சார்ந்த, தமிழ் மக்கள் சார்ந்த பொருளாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மொழியை இணைப்பு மொழியாகப் பேணி பல துறைகளில் நாடு கடந்த பொருளாதார வாய்ப்புக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் ஆங்கில உலகின் உற்பத்திகளை நுகர்ந்தால் தோற்கப் போவது எமது உற்பத்திகளே, எமது பொருளாதாரமே. இன்று மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மேற்குநாடுகள் என வலம் வரும் தமிழ்ப் படைப்பாளிகள் ஆங்கிலம் மட்டும் என்ற உலகில் என்ன முக்கியத்துவம் பெறுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்ப் படங்களோ, நாடகங்களோ, புதினங்களோ மொழிபெயர்க்கப்படுவது கூடுதலாக மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலேயே. இது இயல்பாக இருக்கும் ஒரு பண்பாட்டுப் பொருளாதார வெளிப்பாடு ஆகும். இதை நாம் ஒருமொழிச் சூழலில் இழந்து விடுவோம்.

கனடாவில் அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் பன்மொழிப் புலமை உள்ளவர்களுக்கு மறதிநோய் வருவது 4-6 ஆண்டுகள் பின்போடலாம் என்று கூறுகின்றன. மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்த அறிதிறனோடு இயங்கக் கூடியதாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். உங்களின் அறிதிறனை (cognition) சேமித்து வைக்க பன்மொழி அற்றல் உதவுவாதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முடிவாக, பன்மொழி ஆற்றல் ஒருவருக்கு மேன்மையாக சிந்திக்க, கவனிக்க, பல கோணங்களில் விடயங்களை ஆய உதவி செய்கிறது. ஒருவரின் மூளையை, அறிதிறனை கூடிய காலம் பேண உதவுகிறது. உங்களின் அடையாளத்தை, பண்பாட்டை அறிய, அதனால் பலம் பெற உதவுகிறது. மற்றவகளின் பண்பாட்டை, விழுமியங்களை அறிய உதவுகிறது. வேலைத்தளத்தில் உங்கள் ஆற்றல் பட்டியலை விரிவாக்கிக் காட்ட உதவுகிறது. ஒரு சமூகத்தின் பண்பாடுப் பொருளாதாரத்தை தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கு மேலாக வெவ்வேறு மொழிகளில் இலக்கியத்தை, பாட்டுக்களை, கவிதைகளை இரசிக்க உதவுகிறது. தாய்ப் பால் போல தாய்மொழிக் கல்வியும், சத்துணவு போல பன்மொழி அறிவும் எமக்கு இன்றியமையாதவை.


இணைப்புகள்:
Why Speaking More than One Language May Delay Alzheimer's

The Benefits of Multilingualism

English has colonised our languages

Mother tongue or English?

Sunday, February 20, 2011

காமிக்சு, ராப், குறும்படம், உறுமி, தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் இலக்கியம், திரைத்துறை, ஊடகங்கள், தமிழியல் மாநாடுகள், அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாலும் ஒரு தமிழ் உலகம் உண்டு. இந்தத் தமிழ் உலகம் இயல்பானது, நிரந்தரம் அற்றது, தன்னார்வலர்களால் பேணப்படுவது. தமிழின் துணைப் பண்பாடுகள் இவை. இவற்றைப் பற்றி இந்த சிறிய சமூகங்கள் சாராதவர்கள் அறிந்திருப்பது அரிது. ஆனால் இவர்களை அறியாமல், இவர்கள் தமிழுக்கு செய்யும் பங்களிப்பு அரியது. இவர்களின் உலகங்களே தமிழ் காமிக்சு, ராப், குறும்படம், உறுமி ஆகியன.

தமிழர்கள் பல நாடுகளில் பரவத் தொடங்கினார்கள். பல மொழிகளை, பண்பாடுகளை, தொழில்நுட்பங்களை எதிர் கொண்டார்கள். இவற்றின் தாக்கங்களால், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்பட்ட ஆக்கங்களே இவை. நாட்டுப்புறவியலுக்கு ஒத்த, ஆனல் அதை விட சிறிய ஒரு பரப்பு இவற்றுக்கு உண்டு.

தமிழ் காமிக்சு அல்லது சித்திரக்கதைகள் எனப்படுபவை ஒரு கால கட்டத்தில் மாணவர்களை மாயப் பிடிப்பில் வைத்திருந்த உலகம் ஆகும். 1950 கள் தொடக்கம் தமிழில் வரைகதைகள் உண்டு. 1970 இருந்து 1990 முற்பகுதி மட்டும் தமிழ் வரைகதைகளின் பொற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் லயன் காமிக்சு, ராணி காமிக்சு (1984-1995), வாணுமாமா சித்திரக் கதைகள் உட்பட பல தமிழ் வரைகதை இதழ்கள் வெளிவந்தன. அம்புலிமாமா, பாலமித்திரா போன்ற சிறுவர் இதழ்களிலும் வரைகதைகள் வெளிவந்தன. இந்தக் கதைகள் ஊடாக தமிழ் படித்தவர்கள், வெளி உலகை அறிந்து கொண்டவர்கள், ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் என பல ஆயிரம் பேர் உள்ளார்கள். தொலைக்காட்சி, நிகழ்பட விளையாட்டுக்களின் வருகை, ஆங்கில வழிக் கல்வியின்-வாசிப்பின் ஆதிக்கம் தமிழ் காமிக்சு உலகை தகர்த்தன. எனினும் இன்றும் தமிழ் சித்திரக்கதைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.

1970 அமெரிக்க கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாக, குறிப்பாக சமூக அநீதிகளுக்கு எதிரான அவர்களின் குரலாக் எழுந்த ராப் இசை 90 களில் தமிழில் உருவாகத் தொடங்கியது. தமிழ்ப் பாட்டு என்றால் சினிமாப் பாட்டுத்தான் என்றிருந்த சூழ்நிலையில் தமிழ் ராப் இசை அதன் பிடிக்கு சற்று வெளியே உருவானது. சினிமா ஆதிக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இது முதன்மையாக வெளிப்படவில்லை. மாற்றாக மலேசியாவிலும் புகலிட நாடுகளில் இது வெளியானது. யோகி பி உடன் நட்சத்ரா, சக்ரசோனிக். சுயித், சைன் என தமிழின் சிறந்த ராப் கலைஞர்களுக்கு என ஒரு தனி வரவேற்பு உள்ளது. இவர்களின் பாடு பொருட்கள் விருந்து இருக்கின்றன. இளைஞர்களை தமிழ் மீது ஈர்த்து வைக்க தமிழ் ராப் இசை ஒரு முக்கிய களம் ஆகும்.

தமிழ் குறும்பட, ஆவணப்பட உலகம் பரந்த தமிழ்ச் சமூகம் இன்னும் அறியாத ஒரு கூறாகவே இருந்து வருகிறது. 90 களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகக் குறைந்த பணச்செலவில், உயர்ந்த தரமான குறும் படங்களையும், ஆவணப் படங்களையும் உருவாகக் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கியது. இணையத்தின் விரிவாக்கம் அந்தப் படைப்புகளை உலகமெங்கும் உள்ள தமிழர்களோடு பகிர வழி செய்தது. இதுவரை பேசப்படாத பல தலைப்புகளில், பல பார்வைகளில், பல மூலைகளில் இருந்து தமிழ் குறும்பட/ஆவணப்பட படைப்பாளிகள் ஆக்கங்களைத் தந்த வண்ணம் உள்ளார்கள். இவர்கள் பல குறும்பட விழாக்களை நடத்துகிறார்கள். இணையத்தில் மட்டும் அல்லாமல், தமிழ் தொலைக்காட்சிகளின் ஒரு முக்கிய கூறாகவும் இந்த குறும்படங்கள்/ஆவணப்படங்கள் அமைந்து வருகின்றன.

தமிழ் நாட்டுப்புறவியலின், தமிழிசையின் ஒரு கூறு உறுமி மேளம் ஆகும். சிறுதெய்வ வழிபாட்டில் உறுமி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவர் பாட்டுப் பாட, பலர் கூட்டாக உறுமி மேளத்தையும் இதர இசைக் கருவிகளையும் வாசிப்பர். மலேசியாவில் பிறந்து வாழும் இளைஞர்களுக்கு உறுமி மேளம் மீது இருக்கும் ஈடுபாடு அதீதமானது. கூட்டாக உறுமி வாசிப்பது இவர்கள் பலரின் ஈடுபாடாக இருக்கிறது. மலேசியாவில் பல கோயில்களில் உறுமி மேளக் குழுக்கள் உள்ளன. தேசிய உறுமி மேள போட்டி போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன. உறுமி மேளத்தின் பாட்டுக்கள் ஊடாக இசையின் ஊடாக இவர்களின் உலகம் தமிழோடு இணைப்புப் பெறுகிறது.

இவ்வாறு தமிழிற்கு பல்வேறு துணைப் பண்பாடுகள் உள்ளன. தமிழ் மொழியும், இசையும், பண்பாடும், அடையாளமும் இந்த சிறு சிறு கூறுகளால் பேணப்படுகிறது. ஆனால் இவற்றைப் பற்றிய போதிய அக்கறையோ, ஆய்வோ பொதுத் தமிழ்ச் சமூகத்திடமோ, கல்வியாளர்களிடமோ இல்லை. எமது இலக்கியங்களை, நாட்டுப்புறவியலை, தொழிற்கலைகளை புறக்கணித்தோமோ, அது போலவே தற்போது தமிழின் நிகழ்கால கூறுகளைப் பற்றியும் எம்மிடம் அக்கறை இல்லை. எனினும் இவற்றைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய தமிழ் விக்கிப்பீடியா ஒரு நல்ல தளமாக விளங்குகிறது. தகவல்களைப் பதிந்து, ஆய்வுகளுக்கு உதவி, பொதுத் தமிழ்ச் சமூகத்திடம் எடுத்துச் செல்ல விக்கிப்பீடியா ஒரு தளமாக அமையும். இதப் பணியில் இந்த உலகங்களைச் சார்ந்தவர்கள் நேரடியாகப் பங்களித்து உதவிட வேண்டும்.

Thursday, February 3, 2011

சென்னை, புதுச்சேரி, திருச்சியில் விக்கிப்பீடியா பட்டறைகள்

இம்மாதம் சென்னை, புதுச்சேரி, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள், கூட்டங்கள் நடைபெற உள்ளன. விவரங்களுக்குக் கீழ்க்காணும் பக்கங்களைக் காண்க:

* பிப்ரவரி 6 - சென்னை
* பிப்ரவரி 20 - திருச்சி
* பிப்ரவரி 20 - புதுச்சேரி.

ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

நன்றி.