Thursday, December 8, 2011

பிரித்தானியப் பாரம்பரியத் தொழிற்கலைகள்

பாரம்பரியத் தொழிகலை இழப்பு என்பது தமிழர்களுக்கு மட்டும் உரிய ஒரு சிக்கல் அல்ல. பிரித்தானியாவிலும் கூட இது ஒரு சிக்கல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தொழிற் புரட்சிக்கு அங்கு விருத்தி பெற்ற பாரம்பரியத் தொழிற்கலைகள் ஒரு முக்கிய மூலவேராக இருந்தன. இந்த தொழிற்கலைகளைப் பாதுகாக்கும் வண்ணம் பாரம்பரியத் கைத்தொழில்கள் அமைப்பு (http://www.heritagecrafts.org.uk) மற்றும் பிற நூற்றுக்கணக்கான அமைப்புக்களும் (http://www.heritagecrafts.org.uk/index.php/about/friends-and-affiliated-groups, http://www.worldskillslondon2011.com/) தனிநபர்களும் (http://traditionalcraftsblog.blogspot.com, http://greenwood-carving.blogspot.com, http://nicolawood-design.blogspot.com/p/projects.html) பல்வேறு செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரித்தானிய அமைச்சர் யோன் கெயின்சு இந்தப் பாரம்பரிக் கலைகளை ஆய்வு (http://www.ccskills.org.uk/LinkClick.aspx?fileticket=6cMoZSIdVOA=&tabid=81) செய்வதற்காக ஒரு பெரும் தொகை பணத்தை ஒதுக்கி உள்ளார். இந்தப் பாரம்பரியக் கலைகளை ஊக்குவிப்பதன் மூலம் நவீன பொருளாரத்தின் ஒரு முக்கிய கூறாகவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதை அவரின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

வில்வித்தை, எழுத்துக்கலை போன்றவை நவீன பொருளாதாரத்துக்கு பயன்படாமல் கூடப் போகலாம். ஆனால் அவற்றில் ஒரு இயல்பான நிறைவு கிடைக்கிறது. இசைக் கருவியைப் வாசிப்பது போன்று இந்தக் கலைகளைப் பயில்வதிலும் செய்வதிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது. இதற்காகவாவது இக் கலைகளைப் பாதுகாப்பது முக்கியம் ஆகிறது.

தமிழ்ச் சூழலைப் பொருத்த வரையில் அரசுகள் இந்த மாதிரி தொலைநோக்கான செயற்பாடுகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. எமது தேவைகளை உணரக் கூடிய, தொலைநோக்கான அரசுகளை அமைக்க நாம் தவறிவிட்டோம். எனவே இந்த மாதிரி முன்னெடுப்புக்களை தனிநபர்களும், தன்னார்வலர் அமைப்புக்களுமே முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எழுதப்படாத அறிவு

கருவியில், ஓவியத்தில், சிலையில், கட்டிடத்தில், கைவேலைப்பொருளில், நிகழ்த்தலில், செயலாக்கங்களில், நுணுக்கங்களில் நிறைந்துகிடைக்கிறது எமது அறிவு. ஓர் எண்ணத்தை வெளிப்படுத்த, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல எழுத்து என்பது ஒரு வழிமுறை மட்டுமே. இன்னும் பல வழிமுறைகள் உள்ளன.

உளவியலின் பல் அறிவுகள் கோட்பாட்டின் படி எழுத்தறிவை அல்லது மொழியறிவை விட வேறு பல அறிவுகள் உள்ளன. உடல்சார் அறிவு, இசை அறிவு, அக அறிவு, காட்சி அல்லது இடம்சார் அறிவு (spatial intelligence), மனிதத் தொடர்பாடல் அறிவு, இயற்கை அறிவு இருத்தலியல் அறிவு என்று பல்வேறு அறிவுகள் மனிதருக்கு உள்ளன. வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு அறிவுகளில் கூடிய ஆற்றல்களையும் பிறவற்றில் குறைந்த ஆற்றல்களையும் பெற்று இருப்பர். இந்த அறிவுகள் எல்லாவற்றையும் நாம் எழுத்து மூலம் முழுமையாக வெளிப்படுத்த முடியாது.

ஆடல்காரருக்கு, நடிகருக்கு, அறுவைச் சிகிச்சை நிபுணருக்கு, விளையாட்டு வீரருக்கு உடல் அறிவு முக்கியம் பெறுகிறது. நாம் எவ்வளவுதான் ஓர் ஆடலை எழுத்தில் விபரித்தாலும் அந்த ஆடலை காண்பதற்கு இணையாகாது.

ஓவியருக்கு, வடிவமைப்பாளருக்கு, கட்டிடக்கலைஞருக்கு இடம்சார் அல்லது காட்சியறிவு முக்கியம் பெறுகிறது. ஆயிரம் சொற்களுக்கு ஒரு படம் இணையானது என்பது ஒரு பழமொழி. வட்டத்தை வரையறை செய்து விளக்குவதிலும் பார்க்க படத்தைக் கீறி, இது வட்டம் என்று கூறுவது மிக எளிதானது. ஒருவரின் சிந்தனைத் திறனை விரித்து புது இயல்புகளை கற்பனை செய்ய அல்லது வடிவமைக்க இந்த அறிவு பயன்படுகிறது. இவ்வாறே பல்வேறு அறிவுகள் பல்வேறு வழிகளில் முக்கியம் பெறுகின்றன.

தமிழிலே நுட்பங்கள் பற்றி விரிவான தகவல்கள் எதுவும் எழுதப்படவில்லையெனினும் நாம் அவர்கள் விட்டுச் சென்ற தொல்பொருட்களில் இருந்தும், இன்றும் எம்மிடம் தலைமுறை தலைமுறையாக வழங்கும் கலைகளில் இருந்தும் அவற்றைப் பற்றி ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கலைகள் அழியவிடுவது என்பது எமது பல் அறிவுகளை அழியவிடுவது என்பதாகும். இதில் இருந்து நாம் மீளலாம், எமது அறிவுகளை மீட்டெக்கலாம், மீளுருவாக்கலாம், பேணலாம், புத்தாக்கம் செய்யலாம்.

எழுத்தைத் தாண்டி படங்களாக, ஒலிக் கோப்புக்களாக, நிகழ்படங்களாக, பல்லூடகப் பதிவுகளாக, பொருட்களாக, நிகழ்கலைகளாக நாம் இவற்றை ஆவணப்படுத்தல் காலத்தின் தேவை ஆகும். அதன் ஒரு சிறு முயற்சியான தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் உங்கள் பங்களிப்பை நல்கிடுவீர்.