Saturday, March 7, 2015

சென்னைப் புத்தகக் கண்காட்சியும் புத்தாக்கமும் புத்துயிர்ப்பும்


தமிழ் நூல் வாசகர்களை, பதிப்பகங்களை, நூல்களை, வாசிப்புப் பண்பாட்டை இணைக்கும் இடமாக நூல் கண்காட்சிகள் வளர்ந்துவருகின்றன.  அண்மையில் ரைம்சு ஒப் இந்தியாவில் வெளிவந்த கட்டுரை (How Tamil readers want the world at their door), தமிழில் பல்துறை, குறிப்பாக சமூக அறிவியல் (அரசியல், வரலாறு, தொல்லியல், மானிடவியல்), பண்பாட்டியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் சார்ந்த நூல்களுக்கு சிறப்பான ஒரு சந்தையும் வரவேற்பும் இருப்பதை விபரித்தது. எந்த ஒரு துறை பற்றியும் தமிழில் ஆழமான வளங்களைப் பெற முடியும் என்ற இலக்கை நோக்கியதற்கான நல்நோக்கு நகர்வுகளுகாக மேற்சுட்டிய செய்திகளைப் பார்க்க முடியும்.  குறிப்பாக ஆங்கில மயப்படுத்தப்படும் கல்விச் சூழலில், அமெரிக்க மயப்படுத்தப்பட்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் இவை கூடிய முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.(Tamil Literature Back with a Bang, Chennai Book Fair Sees 24 Lakh Sales)

விருபா (viruba.com) புக்இசுகேப் (bookscape.in) என்ற தளம் நூல்களைப் பட்டியலிட்டுத் (catalog) தருகின்றது.  முறையான பட்டியலாக்கம் இல்லாத தமிழ்ச் சூழலில் இது ஒரு நல்ல முயற்சி.  நூல்களைக் கண்டுபிடிக்க இது உதவுகின்றது.

பப்சப் (pubsub.in) என்ற தளம் நூல்களை கட்டணத்துக்கு இணையம் ஊடாக படிக்க ஏதுவாக்கின்றது.  நெற்பிளிசு (netfliex) போன்ற இச் சேவை விரிந்த  உள்ளடக்கத்தைப் பெறும் போது கூடிய கவனத்தைப் பெறும் எனலாம். 

மதிப்புரை (mathippurai.com) தமிழ் நூல்களுக்கான மதிப்புரைகளைத் தொகுத்து தருகின்றது.  goodreads.com இன் தமிழுக்கான மாதிரியாக இதனை வடிவமைப்பாளர்கள் குறிப்பிட்டாலும், இது மதிப்புரைகளைக் கொண்ட வலைத்தளமாக மட்டுமே தற்போது உள்ளது.  அப்படியான ஒரு சமூகத்தை கட்டியமைப்பதற்கான வாய்ப்பு இன்னும் திறந்தே உள்ளது.


தமிழில் ஏற்கனவே பல தளங்களில் இணையம் ஊடாக மின் நூல்களைப் பெற முடியும்.  அதே போன்று கட்டற்ற முறையில் தமிழ் உள்ளடக்கங்களை ஆவணப்படுத்தும் செயற்திட்டங்களும் தமிழ் எண்ணிம உள்ளடக்கத்தை வாசகர்களிடம் கொண்டு செல்ல பெரிதும் உதவி வருகின்றன. 

தமிழ் வாசகர்களின் தேவைகள், தேடல்கள் விரிந்தவை.  அவர்கள் பெரிந்தொகையுல் இணையத்துக்கு வரும்போது, அவர்களின் தேவைகளை, தேடல்களை ஓரளவாவது பூர்த்தி செய்யும் வண்ணம் தமிழ் இணையமும் பதிப்புத்துறையும் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.