Sunday, November 24, 2013

மருந்துகள் பற்றிய தகவல்கள் ஏன் இந்திய மொழிகளில் இல்லை

ஒரு மருந்து விற்பனைக்கு வர முன், அந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் பெருந்தொகையான ஆவணப்படுத்தல் பணிகளைச் செய்ய வேண்டும்.  மருந்து தொடர்பான ஆய்வுகள், மருந்து கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு (Drug Regulatory Organizations, எ.கா US FDA, Health Canada) அனுப்ப வேண்டிய சமர்ப்பித்தல்கள் (Submissions), மருத்துவர்களுக்கு, நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள், மருந்துப் பொதி தாங்கி இருக்க வேண்டிய அடையாளங்கள் (Labels) எனப் பெருந்தொகை ஆவணங்களை சீர்தரங்களுக்கு ஏற்ப (எ.கா Standard Product Labeling - SPL) அந்த நிறுவனம் உருவாக்கிப் பராமரிக்க வேண்டும்.  இந்த ஆவணங்கள் அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான பெரும் அறிவுச் சொத்து ஆகும். 

வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, யப்பான், அரபு நாடுகள் ஆகியவற்றில் ஒரு மருந்து விற்க அனுமதி பெற வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டுச் சட்ட சீர்தர முறைமைகளுக்கு ஏற்ப பெருந்தொகை ஆவணங்களை ஒரு நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.  எ.கா ஐரோப்பிய ஒன்றியத்தில் மருந்து பற்றிய ஆய்வுகளும், அடையாளங்களும் 27 மொழிகளில் சமர்பிக்கப்பட வேண்டும்.  ஒரு மருந்து பற்றிய விபரங்கள் அந்த நாட்டு மொழியில், அதனைப் பயன்படுத்தும் மக்களின் மொழியில் இருக்க வேண்டும் என அந்த அந்த நாடுகள் எதிர்பார்ப்பதில் வியப்பேதும் இல்லை.  ஒருவர் ஒரு மருந்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அந்த மருந்தால் விளையக் கூடிய பக்க விளைவுகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் அவரது தாய்மொழியில் அமைவது அவரது நலத்துக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான தகவல்கள் ஆகும். 

இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மொழிபெயர்ப்பு வசதிகளைச் சிறப்புக் கவனம் எடுத்து ஆவண உருவாக்க மென்பொருட்கள் (Authoring Tools), ஆவண மேலாண்மை மென்பொருட்கள் (Document Management Systems), செயலாக்க மேலாண்மைத் தொகுதிகள் (Workflow Management Systems) பல உள்ளன.  இவற்றில் தொகுக்கப்படும் தகவல்கள் பொதுமக்கள், துறைசாரார் அணுகக் கூடிய முறையில் பொருளுணரப்பட்டு (semantically extracted) வலைவாசல்களாக அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

இவ்வாறு பல நாடுகள் அந்த அந்த நாட்டு மொழிகளில் மருந்து பற்றிய ஆய்வுகளையும் தகவல்களையும் வழங்க இந்தியா அப்படிச் செய்வதில்லை.  இந்தியச் சட்டத்தின் (Drug and Cosmetics Act) படி ஒரு மருந்து அனுமதி தொடர்பான பொறுப்பு நடுவன் அரசைச் சார்ந்தது, உற்பத்தி விற்பனை தொடர்பான பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்தது.  இரு நிலைகளிலும் இந்திய மொழிகளில் தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்ற எந்த விதிகளோ(Regulations), பரிந்துரைகள் கூட இல்லை.  குறைந்த பட்சம் இந்த இரு நிலைகளின் வலைத்தளங்கள் கூட (http://cdsco.nic.in, http://www.tnhealth.org/) கூட பன்மொழியில் இல்லை. 

ஒரு நிறுவனம் ஐரோப்பாவில், சீனாவில், யப்பானில், அரபு நாடுகளில், இசுரேலில் அந்த அந்த நாட்டு மொழியில் தனது தகவல்களைச் சமர்ப்பிக்கத் தயாராக இருந்தால், அதே நிறுவனம் இந்தியாவில் அப்படி ஏன் செய்ய முன்வராது.  இது ஒரு நுட்ப அல்லது நிதிச் சிக்கல் இல்லை.  இந்திய அரசின் விதிமுறைகள் சார்ந்த ஒரு சிக்கலே. 

மருத்துவம் (Medicine), நலம் (Health), மருந்துகள் (Drugs) தொடர்பான தகவல்கள் மக்களின் மொழியில் இருத்தல் அவசியமானதாகும்.  விக்கியில் இவற்றின் தகவல்களைத் தொகுப்பதில் அவை இந்திய மொழிகளில் இல்லாமல் இருப்பது பெரும் தடையாக அமைகிறது.  சிறிய மொழிபெயர்ப்புச் செலவுடன், ஒரு பெரும் பலனைத் தரக் கூடிய இந்த மாதிரி விதிகள் தொடர்பாக அறிவு அணுக்கம் தொடர்பான செயற்திட்டங்கள் (Centre for Internet Society's Access To Knowledge - http://meta.wikimedia.org/wiki/India_Access_To_Knowledge) கவனத்தில் கொள்ள வேண்டும்.

Sunday, November 10, 2013

இத் தலைமுறையின் கடமை: பிரஞ்சுத் தமிழ்ப் படைப்புகள்

ஈழப் போராலும், பொருளாதார நலிவாலும் மேற்குநாடுகளுக்கு பெருந்தொகைத் தமிழர்கள் ஈழத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் குடியேறியுள்ளார்கள்.  சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குநாட்டினர் எம்மிடம் வந்து, எமது மொழியைக் கற்று, எம்மை ஆய்ந்து போன்ற ஒரு வாய்ப்பை நாம் இப்பொழுது பெற்று இருக்கிறோம்.  ஒரு நாட்டின் புவியியல், வரலாறு, அரசியல் சட்ட முறைமைகள், வாழ்வியல், பண்பாடு, இனங்கள், மொழிகள், இலக்கியம், கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு தகவல்களை நேரடியாக வாழ்ந்து, ஆய்ந்து, அவதானித்து, தொகுத்து தமிழில் பதிவுசெய்வதற்கான ஒரு பெரும் வாய்ப்பை நாம் பெற்று இருக்கிறோம். 

இந்த வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது, குறுகிய கால எல்லையைக் கொண்டது.  பல காரணங்களால் புகலிடத் தலைமுறைப் பிள்ளைகள் தமிழ் மொழியை இழந்து வருகிறார்கள்.  பேச்சு மொழியாகக் கூடத் தமிழ் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரிடம் அருகி வருகிறது.  அதனால் தமிழில் வாசிக்க, எழுத, நுணுக்கமாக ஆயும் திறமையை முதலாம் தலைமுறையினர் மட்டுமே பெரும்பாலும் கொண்டு இருக்கிறார்கள்.  இதனாலேயே இந்த அறிவுச் செல்வங்களை தமிழுக்கு கொண்டு வரும் பெரும் பொறுப்பு, கடமை இவர்களிடம் இருக்கிறது.  "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.  இறவாத புகழு டையபுது நூல்கள் தமிழ் மொழியில் லியற்றல் வேண்டும்" என்ற பாரதியின் வேட்கையை நிறைவேற்றும் வாய்ப்பை இத் தலைமுறை மட்டுமே கொண்டுள்ளது. 

புலம்பெயர் இலக்கியம் என்பதற்கு அப்பால் மொழிபெயர்ப்பில், திறனாய்வில், கலைச்சொல்லாக்கத்தில், அறிவியல் தமிழில் இத் தலைமுறையினரிடம் நாம் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் இருக்கிறோம்.  அந்த வகையில் பிரான்சில் வெளிவந்த ஆக்கங்கள் சில சிறப்பான எடுத்துக்காட்டுக்களாக இருக்கின்றன.  சதாசிவம் சச்சிதானாந்தம் எழுதிய "பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு" என்ற நூல்  பிரான்சு நாடு, மொழி, மக்கள், வரலாறு, அரசியல், பண்பாட்டியல், வாழ்வியல், சமூகவியல் எனப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து தரும் ஒரு சிறு கலைக்களஞ்சியம் ஆகும்.  இந்த நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு யேர்மனி, நோர்வே, டென்மார்க், பின்லாந்து என ஒவ்வொரு நாடுசார் செய்திகளையும் நாம் தொகுக்க முடியும்.  க. வாசுதேவன் எழுதி இந்த ஆண்டு வெளிவந்த "பிரஞ்சுப் புரட்சி" என்ற நூல் இன்னுமொரு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.  இன்றைய அரசியல் சட்ட முறைமைகள் வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரஞ்சுப் புரட்சியைப் பற்றிய படைப்பு அங்கு சில பத்து ஆண்டுகள் வாழ்ந்து கல்வி கற்ற ஒருவரின் விபரிப்பில் கிடைக்கிறது.  க. வாசுதேவனின் "19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்" என்ற மொழிபெயர்ப்பு நூல் பிரஞ்சு இலக்கியத்தின், பண்பாட்டின், சிந்தனையின் வேறு ஒரு பக்கத்தைப் பகிர்கிறது.  பல தமிழ்-பிரஞ்சு-தமிழ் அகராதிகள் வெளிவந்துள்ளன.  நாகரத்தினம் கிருஷ்ணா, ஷோபா சக்தி, கலாமோகன் போன்ற பல எழுத்தாளர்கள் பிரான்சில் இருந்து தமிழுக்கு பல படைப்புக்களை வழங்கி உள்ளார்கள்.

பிரஞ்சுப் பாண்டிச்சேரி, குட்டி யாழ்ப்பாணம் என்று அறியப்படும் லா சப்பல், தமிழ் வம்சாவழியினர் பெரிது வாழும் பிரஞ்சுக் குடியேற்றவாத நாடுகளான மொரிசியசு, ரியூனியன் என்று தமிழர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்குமான தொடர்பு நீண்டது, பரந்தது, அடக்குமுறைகள் நிறைந்தது.  உலக நாகரிக, பண்பாட்டு, சிந்தனை வளர்ச்சியின் உயரிய ஓர் வடிவமாகக் கொள்ளப்படும் பிரான்சிடம் இருந்து நாம் இத் தொடர்பு ஊடாகக் பெற்றுக் கொள்ளக் கூடிய உச்ச மதிப்பான ஒன்றாக அவர்களது அறிவே அமையும்.  அந்த அறிவை நேரடியாக, நுணுக்கமாக, எமது மொழியில் எமது பார்வையில் தொகுத்து தரும் வாய்ப்பை இன்றைய தலைமுறையினர் மட்டுமே கொண்டுள்ளார்கள்.  மேலே சுட்டப்பட்ட படைப்புக்கள் போதாது.  இது மாதிரி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான படைப்புக்கள் எமக்கு வேண்டும்.  நூறாயிரம் வரையில் தமிழர்கள் வாழும் பிரான்சில் இருந்து ஒரு தமிழ் விக்கி பங்களிப்பாளர் கூட அமையாதது ஒரு பெரும் குறையே.  வருவீர், உங்கள் அறிவைப் பகிர்வீர்.