Tuesday, August 10, 2010

தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல்

தமிழின், தமிழரின், பிறரின் வரலாற்றை, கலைகளை, நுட்பங்களை, அறிவியலை எண்மிய பல்லூடக முறையில் தமிழில் ஆவணப்படுத்திப் பகிர்வது தமிழ்ச் சமூக வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய செயற்பாடுகளில் ஒன்று. சங்க காலம், சோழ-பாண்டிய பேரசுக் காலங்களை நோக்குகையில் தமிழர்கள் பல் துறைகளில் உயர்ந்த அறிவைப் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. உலக நாகரிகங்களில் ஒரு முக்கிய ஊற்று தமிழர்களுடையது. ஆனால் தமிழர்கள் வெல்லப்பட்டு அடக்கி வைக்கப்பட்டபோது நாம் எமது அறிவை இழந்தோம். எமது ஆவணப்படுத்தலின், பாதுகாத்தலின் போதாமைகளும் எமது அறிவை நாம் இழக்கக் காரணமாயின. இதனால் நாம் பண்பாட்டு, அரசியல், பொருளாதார முனைகளில் பல பாதிப்புக்களைச் சந்தித்தோம்.

எனினும் பிற பல மொழிகள் போல் அல்லாமல் தமிழுக்கு தொன்று தொட்டே எழுதப்பட்ட இலக்கியங்கள் உண்டு. கல்வெட்டுக்கள், சிலைகள், கட்டிடங்கள், தொல்பொருட்கள் ஆகியவை தமிழர் அறிவியலைச் அறிய உதவும் சான்றுகளாக உள்ளன. வாய் மொழி இலக்கியம், கலைகள், தொழில்கள் தமிழிர் அறிவின் வாழும் ஆதாராங்களாக உள்ளன. இன்று இந்த அறிவு எண்மிய பல்லூடக முறையில் ஆவணப் படுத்தப்படுவது ஒரு முக்கிய தேவையாக உள்ளது.

19 ம் நூற்றாண்டில் ஏட்டில் இருந்தல் தமிழ் இலக்கியங்கள் அச்சுப் பதிக்கப் பட்டமை தமிழரின் மறுமலர்ச்சிக்கு ஒரு வளமாக அமைந்தது. 20 ம் நூற்றாண்டில் பலர் மேற்கொண்ட நாட்டாரியல் ஆய்வுகள் எமது பழமொழிகளை, பாடல்களை, வழக்கங்களை, இன்னும் பல கூறுகளைப் பதிவு செய்து தமிழ்ச் சமூகத்தின் உயர்நாடி ஒன்றைப் பாதுக்காத்தது. ஆனால் இதே போன்ற செயற்பாடுகள் தமிழர் தொழில்நுட்பங்கள், அறிவியல் நோக்கிச் செயற்படுத்தப்படவில்லை. இன்று எமது சூழல், அது சார்ந்த உற்பத்திகள் பற்றி நாம் கொண்டிருந்த இயல்பான அறிவை இழந்து நிற்கிறோம். மீண்டும் மேற்குநாடுகள் வழியே இயற்கை வேளாண்மை, பேண்தகு மீன்பிடிப்பு, மர வேலை, கட்டிடக்கலை போன்ற அறிவுகளை அறிய தள்ளப்பட்டிருக்கிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் நாம் எமது அறிவை அவணப் படுத்தல் அவசியமாகும்.

எமது அறிவு மட்டும் அல்லாமல் வேகாமாக மாறும் உலகின் பல்துறை அறிவும் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். உலகில் பரந்து வாழும் தமிழர்கள் அந்த அந்த நாட்டு புவியியல், பண்பாடு, கலைகள், இலக்கியங்கள் பற்றி மட்டும் அல்லாமல், அங்கு உள்ள சமூக அமைப்புகள், சட்டங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவையும் பகிர வேண்டும். இது எமக்கு இன்று இருக்கும் ஒரு அரிய வாய்ப்பு.

இந்த அறிவுகளை நாம் இணையம் மூலம், பல்லூடக வழிகளில் ஆவணப் படுத்திப் பகிர வேண்டும். இன்று காட்சி ஊடகமே முக்கியம் பெற்று வருகிறது. பல பத்திகளில் சொல்வதை, ஒரு காட்சியில் காட்டி விட முடியும். ஒலிக் கோப்பு (audio), நிகழ்படம் (video), இயங்குபடம் (animation), நிகழ்த்தல் (ppt), படங்கள் (images), தரவுகள் (data), எழுத்து (text) என எண்மிய பல்லூடக முறையில் நாம் ஆவணப் படுத்தி, எளிய முறையில் பகிர வேண்டும்.

இந்த கூட்டறிவு ஆவணப் படுத்தலை, உற்பத்தியை நாம் கூட்டாக, பரவலான முறையில், சேர்ந்தியங்க உதவும் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்யலாம். எமது விளைச்சல்களை கூட்டாக உரிமைப் படுத்தி அனைவரும் பயன் பெறலாம்.

இந்த செயற்பாடுகளில் தமிழ் விக்கியூடகங்கள், மதுரைத் திட்டம், நூலகத் திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற பலர் செயற்படுகிறார்கள். இவற்றில் பல நிறைகளும் குறைகளும் உள்ளன. இவற்றை மேம்படுத்தி, மேலும் பல களங்களை அமைக்க வேண்டியது எமது இன்றைய தேவையாகிறது.

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஐரோப்பாவில் மேற்படிப்பு படித்த போது, சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூட அவர்களின் ஆவணமாக்க முனைப்பு கண்டு வியந்திருக்கிறேன். எழுத்தறிவின்மை, குடும்ப இரகசியம் போன்றவற்றால் நாம் பெருமளவு வாய் வழி அறிவு கடத்தும் சமூகமாக இருந்து வந்திருப்பதும் இந்தப் பண்பாட்டுப் போக்குக்கு ஒரு காரணம்.

Post a Comment