Sunday, February 20, 2011

காமிக்சு, ராப், குறும்படம், உறுமி, தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் இலக்கியம், திரைத்துறை, ஊடகங்கள், தமிழியல் மாநாடுகள், அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாலும் ஒரு தமிழ் உலகம் உண்டு. இந்தத் தமிழ் உலகம் இயல்பானது, நிரந்தரம் அற்றது, தன்னார்வலர்களால் பேணப்படுவது. தமிழின் துணைப் பண்பாடுகள் இவை. இவற்றைப் பற்றி இந்த சிறிய சமூகங்கள் சாராதவர்கள் அறிந்திருப்பது அரிது. ஆனால் இவர்களை அறியாமல், இவர்கள் தமிழுக்கு செய்யும் பங்களிப்பு அரியது. இவர்களின் உலகங்களே தமிழ் காமிக்சு, ராப், குறும்படம், உறுமி ஆகியன.

தமிழர்கள் பல நாடுகளில் பரவத் தொடங்கினார்கள். பல மொழிகளை, பண்பாடுகளை, தொழில்நுட்பங்களை எதிர் கொண்டார்கள். இவற்றின் தாக்கங்களால், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெளிப்பட்ட ஆக்கங்களே இவை. நாட்டுப்புறவியலுக்கு ஒத்த, ஆனல் அதை விட சிறிய ஒரு பரப்பு இவற்றுக்கு உண்டு.

தமிழ் காமிக்சு அல்லது சித்திரக்கதைகள் எனப்படுபவை ஒரு கால கட்டத்தில் மாணவர்களை மாயப் பிடிப்பில் வைத்திருந்த உலகம் ஆகும். 1950 கள் தொடக்கம் தமிழில் வரைகதைகள் உண்டு. 1970 இருந்து 1990 முற்பகுதி மட்டும் தமிழ் வரைகதைகளின் பொற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் லயன் காமிக்சு, ராணி காமிக்சு (1984-1995), வாணுமாமா சித்திரக் கதைகள் உட்பட பல தமிழ் வரைகதை இதழ்கள் வெளிவந்தன. அம்புலிமாமா, பாலமித்திரா போன்ற சிறுவர் இதழ்களிலும் வரைகதைகள் வெளிவந்தன. இந்தக் கதைகள் ஊடாக தமிழ் படித்தவர்கள், வெளி உலகை அறிந்து கொண்டவர்கள், ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டவர்கள் என பல ஆயிரம் பேர் உள்ளார்கள். தொலைக்காட்சி, நிகழ்பட விளையாட்டுக்களின் வருகை, ஆங்கில வழிக் கல்வியின்-வாசிப்பின் ஆதிக்கம் தமிழ் காமிக்சு உலகை தகர்த்தன. எனினும் இன்றும் தமிழ் சித்திரக்கதைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன.

1970 அமெரிக்க கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாக, குறிப்பாக சமூக அநீதிகளுக்கு எதிரான அவர்களின் குரலாக் எழுந்த ராப் இசை 90 களில் தமிழில் உருவாகத் தொடங்கியது. தமிழ்ப் பாட்டு என்றால் சினிமாப் பாட்டுத்தான் என்றிருந்த சூழ்நிலையில் தமிழ் ராப் இசை அதன் பிடிக்கு சற்று வெளியே உருவானது. சினிமா ஆதிக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இது முதன்மையாக வெளிப்படவில்லை. மாற்றாக மலேசியாவிலும் புகலிட நாடுகளில் இது வெளியானது. யோகி பி உடன் நட்சத்ரா, சக்ரசோனிக். சுயித், சைன் என தமிழின் சிறந்த ராப் கலைஞர்களுக்கு என ஒரு தனி வரவேற்பு உள்ளது. இவர்களின் பாடு பொருட்கள் விருந்து இருக்கின்றன. இளைஞர்களை தமிழ் மீது ஈர்த்து வைக்க தமிழ் ராப் இசை ஒரு முக்கிய களம் ஆகும்.

தமிழ் குறும்பட, ஆவணப்பட உலகம் பரந்த தமிழ்ச் சமூகம் இன்னும் அறியாத ஒரு கூறாகவே இருந்து வருகிறது. 90 களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகக் குறைந்த பணச்செலவில், உயர்ந்த தரமான குறும் படங்களையும், ஆவணப் படங்களையும் உருவாகக் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கியது. இணையத்தின் விரிவாக்கம் அந்தப் படைப்புகளை உலகமெங்கும் உள்ள தமிழர்களோடு பகிர வழி செய்தது. இதுவரை பேசப்படாத பல தலைப்புகளில், பல பார்வைகளில், பல மூலைகளில் இருந்து தமிழ் குறும்பட/ஆவணப்பட படைப்பாளிகள் ஆக்கங்களைத் தந்த வண்ணம் உள்ளார்கள். இவர்கள் பல குறும்பட விழாக்களை நடத்துகிறார்கள். இணையத்தில் மட்டும் அல்லாமல், தமிழ் தொலைக்காட்சிகளின் ஒரு முக்கிய கூறாகவும் இந்த குறும்படங்கள்/ஆவணப்படங்கள் அமைந்து வருகின்றன.

தமிழ் நாட்டுப்புறவியலின், தமிழிசையின் ஒரு கூறு உறுமி மேளம் ஆகும். சிறுதெய்வ வழிபாட்டில் உறுமி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவர் பாட்டுப் பாட, பலர் கூட்டாக உறுமி மேளத்தையும் இதர இசைக் கருவிகளையும் வாசிப்பர். மலேசியாவில் பிறந்து வாழும் இளைஞர்களுக்கு உறுமி மேளம் மீது இருக்கும் ஈடுபாடு அதீதமானது. கூட்டாக உறுமி வாசிப்பது இவர்கள் பலரின் ஈடுபாடாக இருக்கிறது. மலேசியாவில் பல கோயில்களில் உறுமி மேளக் குழுக்கள் உள்ளன. தேசிய உறுமி மேள போட்டி போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன. உறுமி மேளத்தின் பாட்டுக்கள் ஊடாக இசையின் ஊடாக இவர்களின் உலகம் தமிழோடு இணைப்புப் பெறுகிறது.

இவ்வாறு தமிழிற்கு பல்வேறு துணைப் பண்பாடுகள் உள்ளன. தமிழ் மொழியும், இசையும், பண்பாடும், அடையாளமும் இந்த சிறு சிறு கூறுகளால் பேணப்படுகிறது. ஆனால் இவற்றைப் பற்றிய போதிய அக்கறையோ, ஆய்வோ பொதுத் தமிழ்ச் சமூகத்திடமோ, கல்வியாளர்களிடமோ இல்லை. எமது இலக்கியங்களை, நாட்டுப்புறவியலை, தொழிற்கலைகளை புறக்கணித்தோமோ, அது போலவே தற்போது தமிழின் நிகழ்கால கூறுகளைப் பற்றியும் எம்மிடம் அக்கறை இல்லை. எனினும் இவற்றைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய தமிழ் விக்கிப்பீடியா ஒரு நல்ல தளமாக விளங்குகிறது. தகவல்களைப் பதிந்து, ஆய்வுகளுக்கு உதவி, பொதுத் தமிழ்ச் சமூகத்திடம் எடுத்துச் செல்ல விக்கிப்பீடியா ஒரு தளமாக அமையும். இதப் பணியில் இந்த உலகங்களைச் சார்ந்தவர்கள் நேரடியாகப் பங்களித்து உதவிட வேண்டும்.

3 comments:

செந்தி said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்,
தமிழ் என்றாலே இப்போது பலருக்குக் (தமிழருக்குத்தான்) கசக்கின்றது; இந்நிலை மாறுமா?
சிந்திக்கவைக்கும் உங்கள் கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள்!

அக்காலத்தில் சித்திரக்கதைகள் படித்தது நினைவில் வந்தது, முத்துக்காமிக்சு போன்றவை மொழிபெயர்ப்புக் காமிக்சு வெளியிட்டன, கல்கி போன்ற இதழ்கள் தமிழில் வாண்டுமாமாவின் "சிலையைத்தேடி" போன்ற கதைகளை வெளியிட்டன.

நற்கீரன் said...

நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள்

Post a Comment