Sunday, November 10, 2013

இத் தலைமுறையின் கடமை: பிரஞ்சுத் தமிழ்ப் படைப்புகள்

ஈழப் போராலும், பொருளாதார நலிவாலும் மேற்குநாடுகளுக்கு பெருந்தொகைத் தமிழர்கள் ஈழத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் குடியேறியுள்ளார்கள்.  சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குநாட்டினர் எம்மிடம் வந்து, எமது மொழியைக் கற்று, எம்மை ஆய்ந்து போன்ற ஒரு வாய்ப்பை நாம் இப்பொழுது பெற்று இருக்கிறோம்.  ஒரு நாட்டின் புவியியல், வரலாறு, அரசியல் சட்ட முறைமைகள், வாழ்வியல், பண்பாடு, இனங்கள், மொழிகள், இலக்கியம், கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற பல்வேறு தகவல்களை நேரடியாக வாழ்ந்து, ஆய்ந்து, அவதானித்து, தொகுத்து தமிழில் பதிவுசெய்வதற்கான ஒரு பெரும் வாய்ப்பை நாம் பெற்று இருக்கிறோம். 

இந்த வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது, குறுகிய கால எல்லையைக் கொண்டது.  பல காரணங்களால் புகலிடத் தலைமுறைப் பிள்ளைகள் தமிழ் மொழியை இழந்து வருகிறார்கள்.  பேச்சு மொழியாகக் கூடத் தமிழ் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரிடம் அருகி வருகிறது.  அதனால் தமிழில் வாசிக்க, எழுத, நுணுக்கமாக ஆயும் திறமையை முதலாம் தலைமுறையினர் மட்டுமே பெரும்பாலும் கொண்டு இருக்கிறார்கள்.  இதனாலேயே இந்த அறிவுச் செல்வங்களை தமிழுக்கு கொண்டு வரும் பெரும் பொறுப்பு, கடமை இவர்களிடம் இருக்கிறது.  "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.  இறவாத புகழு டையபுது நூல்கள் தமிழ் மொழியில் லியற்றல் வேண்டும்" என்ற பாரதியின் வேட்கையை நிறைவேற்றும் வாய்ப்பை இத் தலைமுறை மட்டுமே கொண்டுள்ளது. 

புலம்பெயர் இலக்கியம் என்பதற்கு அப்பால் மொழிபெயர்ப்பில், திறனாய்வில், கலைச்சொல்லாக்கத்தில், அறிவியல் தமிழில் இத் தலைமுறையினரிடம் நாம் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் இருக்கிறோம்.  அந்த வகையில் பிரான்சில் வெளிவந்த ஆக்கங்கள் சில சிறப்பான எடுத்துக்காட்டுக்களாக இருக்கின்றன.  சதாசிவம் சச்சிதானாந்தம் எழுதிய "பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு" என்ற நூல்  பிரான்சு நாடு, மொழி, மக்கள், வரலாறு, அரசியல், பண்பாட்டியல், வாழ்வியல், சமூகவியல் எனப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து தரும் ஒரு சிறு கலைக்களஞ்சியம் ஆகும்.  இந்த நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு யேர்மனி, நோர்வே, டென்மார்க், பின்லாந்து என ஒவ்வொரு நாடுசார் செய்திகளையும் நாம் தொகுக்க முடியும்.  க. வாசுதேவன் எழுதி இந்த ஆண்டு வெளிவந்த "பிரஞ்சுப் புரட்சி" என்ற நூல் இன்னுமொரு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.  இன்றைய அரசியல் சட்ட முறைமைகள் வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிரஞ்சுப் புரட்சியைப் பற்றிய படைப்பு அங்கு சில பத்து ஆண்டுகள் வாழ்ந்து கல்வி கற்ற ஒருவரின் விபரிப்பில் கிடைக்கிறது.  க. வாசுதேவனின் "19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்" என்ற மொழிபெயர்ப்பு நூல் பிரஞ்சு இலக்கியத்தின், பண்பாட்டின், சிந்தனையின் வேறு ஒரு பக்கத்தைப் பகிர்கிறது.  பல தமிழ்-பிரஞ்சு-தமிழ் அகராதிகள் வெளிவந்துள்ளன.  நாகரத்தினம் கிருஷ்ணா, ஷோபா சக்தி, கலாமோகன் போன்ற பல எழுத்தாளர்கள் பிரான்சில் இருந்து தமிழுக்கு பல படைப்புக்களை வழங்கி உள்ளார்கள்.

பிரஞ்சுப் பாண்டிச்சேரி, குட்டி யாழ்ப்பாணம் என்று அறியப்படும் லா சப்பல், தமிழ் வம்சாவழியினர் பெரிது வாழும் பிரஞ்சுக் குடியேற்றவாத நாடுகளான மொரிசியசு, ரியூனியன் என்று தமிழர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்குமான தொடர்பு நீண்டது, பரந்தது, அடக்குமுறைகள் நிறைந்தது.  உலக நாகரிக, பண்பாட்டு, சிந்தனை வளர்ச்சியின் உயரிய ஓர் வடிவமாகக் கொள்ளப்படும் பிரான்சிடம் இருந்து நாம் இத் தொடர்பு ஊடாகக் பெற்றுக் கொள்ளக் கூடிய உச்ச மதிப்பான ஒன்றாக அவர்களது அறிவே அமையும்.  அந்த அறிவை நேரடியாக, நுணுக்கமாக, எமது மொழியில் எமது பார்வையில் தொகுத்து தரும் வாய்ப்பை இன்றைய தலைமுறையினர் மட்டுமே கொண்டுள்ளார்கள்.  மேலே சுட்டப்பட்ட படைப்புக்கள் போதாது.  இது மாதிரி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான படைப்புக்கள் எமக்கு வேண்டும்.  நூறாயிரம் வரையில் தமிழர்கள் வாழும் பிரான்சில் இருந்து ஒரு தமிழ் விக்கி பங்களிப்பாளர் கூட அமையாதது ஒரு பெரும் குறையே.  வருவீர், உங்கள் அறிவைப் பகிர்வீர்.

No comments:

Post a Comment