Saturday, February 26, 2011

பன்மொழி ஆற்றலின் பயன்கள்

தமிழ்நாட்டிலும், புகலிட நாடுகளிலும் வீட்டிலோ, வேலையிலோ, உறவினர்களோடோ, நண்பர்களோடோ, இதர தமிழர்களோடோ தமிழர்கள் தமிழ் பேசுவது அருகி வருகிறது. தமிழில் கல்வி, தாய்மொழிக் கல்வி போய், தற்போது தமிழ் கல்வியே வேண்டாம் என்று தமிழ்நாட்டில் பலர் வேண்டி நிற்கின்றனர். தமிழ் கல்வி ஒன்றுக்கும் உதாவாதது. தமிழ் கல்வி மாணவர்களுக்கு சுமை சேர்க்கும் என்பது பலரின் வாதம். ஆங்கிலமே கல்வியில், வணிகத்தில், உலகமயமாதலில் ஆதிக்கம் செலுத்துவதால் அது மட்டுமே கற்பது, அதிலேயே அறிவுப் புலத்தை உருவாக்குவது போதுமானது என்பது தற்போது வேகமாக தமிழ்ச் சமூகத்தில் முன்னெடுக்கப்படும் கற்பிதம் ஆகும். இது தொலைநோக்கற்ற, குறுகிய, கேடு தரக்கூடிய பார்வை ஆகும்.

முதலில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் தாய்மொழி அல்லது பன்மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் கற்பதே அவர்களின் வருங்காலத்துக்கு நல்லது என்ற கருத்து தவறானது. பல சீரிய ஆய்வுகள் குழந்தைகள் இரு மொழிகளைக் கற்பதால் அவர்களின் பல்வேறு ஆற்றல்கள் விருத்தி பெறுவதை எடுத்துக் காட்டி உள்ளன. ஒப்பீட்டளவில் இரு மொழிகளைக் கற்கும் குழந்தைகளின் கவனிப்பு ஆற்றல் மற்றக் குழந்தைகளை விட மேன்மையாக இருக்கிறது. அவர்களின் சிந்திக்கும் ஆற்றலுக்கும் உதவி செய்கிறது. சிந்தனைகளை மொழியில் இருந்து பிரித்து, நுண்புலமாக சிந்திக்க பன்மொழி ஆற்றல் உதவுகிறது. வெவ்வேறு பண்பாட்டு மொழிச் சூழலில் பல விடயங்களைப் பொருத்தி ஆராய பன்மொழி ஆற்றல் உதவுகிறது. இவருக்கு தமிழ் விளங்கும் ஆனா கதைக்க மாட்டார், அல்லது வாசிக்க மாட்டார் போன்ற மொழி ஆற்றலை இங்கு குறிப்பிடவில்லை.

ஒருவருக்கு அவரின் அடையாளம் என்பது முக முக்கியமானது. தமிழர்களைப் பொருத்த வரையில் அவர்களின் அடையாளம் அவர்களின் மொழியோடு பின்னிப் பிணைந்தது. எமது வரலாறு, இலக்கியம், அறிவு எமது மொழியிலேயே பொதிந்து கிடக்கிறது. இந்த அடையாளத்தை ஒருவருக்குத் தருவதில் தமிழ் மொழி அவசிமாகிறது. இரண்டாம் மொழி சிங்களமாக, மலாயாக, ஆங்கிலமாக, இந்தியாக இருக்கலாம், ஆனால் தமிழில் பேச, எழுத, வாசிக்கத் தெரியாமல் தமிழர் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. தமிழ், தமிழர் என்று உண்மையாக உழைக்கும் பலர் கூட இந்த அடிப்படையை உணராமல் தமது பிள்ளைகளை அன்னியர் ஆக்குகிறார்கள்.

இன்று ஆங்கிலம் கற்பவர்கள் வணிகத்திற்காகவே பெரும்பாலும் கற்கிறார்கள். ஆனால் பொருளாதார உலகம் வேகமாக மாறி வருகிறது. சீனா, மத்திய கிழக்கு நாடுகள், யப்பான், உருசியா, செருமனி, பிரேசில், எசுபானிய நாடுகள், மலேசியா, இந்தோனேசியா, இந்தியா என வெவ்வேறு மொழிகளின் உலகங்களின் விரிந்து வருகின்றன. எனவே ஆங்கிலத்தைத் தாண்டி சீனம், அரபு, யப்பானிசு, உருசியன், யேர்மன், போர்த்துக்கீசு, எசுபானிசு, இந்தி என பல மொழிகளைக் கற்பதும் தேவையாகிறது. எனவே ஆங்கிலம் மட்டும் என்பது போதுமானது அல்ல.

தமிழ்த் திரைத்துறை, இசைத்துறை, பதிப்புத்துறை, கல்வித்துறை என தமிழ் மொழி சார்ந்த, தமிழ் மக்கள் சார்ந்த பொருளாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மொழியை இணைப்பு மொழியாகப் பேணி பல துறைகளில் நாடு கடந்த பொருளாதார வாய்ப்புக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் ஆங்கில உலகின் உற்பத்திகளை நுகர்ந்தால் தோற்கப் போவது எமது உற்பத்திகளே, எமது பொருளாதாரமே. இன்று மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மேற்குநாடுகள் என வலம் வரும் தமிழ்ப் படைப்பாளிகள் ஆங்கிலம் மட்டும் என்ற உலகில் என்ன முக்கியத்துவம் பெறுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்ப் படங்களோ, நாடகங்களோ, புதினங்களோ மொழிபெயர்க்கப்படுவது கூடுதலாக மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலேயே. இது இயல்பாக இருக்கும் ஒரு பண்பாட்டுப் பொருளாதார வெளிப்பாடு ஆகும். இதை நாம் ஒருமொழிச் சூழலில் இழந்து விடுவோம்.

கனடாவில் அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் பன்மொழிப் புலமை உள்ளவர்களுக்கு மறதிநோய் வருவது 4-6 ஆண்டுகள் பின்போடலாம் என்று கூறுகின்றன. மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்த அறிதிறனோடு இயங்கக் கூடியதாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். உங்களின் அறிதிறனை (cognition) சேமித்து வைக்க பன்மொழி அற்றல் உதவுவாதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முடிவாக, பன்மொழி ஆற்றல் ஒருவருக்கு மேன்மையாக சிந்திக்க, கவனிக்க, பல கோணங்களில் விடயங்களை ஆய உதவி செய்கிறது. ஒருவரின் மூளையை, அறிதிறனை கூடிய காலம் பேண உதவுகிறது. உங்களின் அடையாளத்தை, பண்பாட்டை அறிய, அதனால் பலம் பெற உதவுகிறது. மற்றவகளின் பண்பாட்டை, விழுமியங்களை அறிய உதவுகிறது. வேலைத்தளத்தில் உங்கள் ஆற்றல் பட்டியலை விரிவாக்கிக் காட்ட உதவுகிறது. ஒரு சமூகத்தின் பண்பாடுப் பொருளாதாரத்தை தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கு மேலாக வெவ்வேறு மொழிகளில் இலக்கியத்தை, பாட்டுக்களை, கவிதைகளை இரசிக்க உதவுகிறது. தாய்ப் பால் போல தாய்மொழிக் கல்வியும், சத்துணவு போல பன்மொழி அறிவும் எமக்கு இன்றியமையாதவை.


இணைப்புகள்:
Why Speaking More than One Language May Delay Alzheimer's

The Benefits of Multilingualism

English has colonised our languages

Mother tongue or English?

2 comments:

Anonymous said...

நல்லதொரு பதிவு ! பன்மொழி ஆற்றல் தேவை. மூளை நன்கு வேலை செய்ய தாய்மொழி ஆற்றல் கண்டிப்பாக தேவை...

மதுரை சரவணன் said...

//முடிவாக, பன்மொழி ஆற்றல் ஒருவருக்கு மேன்மையாக சிந்திக்க, கவனிக்க, பல கோணங்களில் விடயங்களை ஆய உதவி செய்கிறது. ஒருவரின் மூளையை, அறிதிறனை கூடிய காலம் பேண உதவுகிறது. உங்களின் அடையாளத்தை, பண்பாட்டை அறிய, அதனால் பலம் பெற உதவுகிறது. மற்றவகளின் பண்பாட்டை, விழுமியங்களை அறிய உதவுகிறது. //

பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்

Post a Comment