Thursday, October 29, 2009

[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப்பு அனுபவம்

இணைய உலகிலும் தமிழ் இணையச்சூழலிலும் சமூக வலையமைப்புச் சேவைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

Facebook, Twitter போன்றவற்றில் இணையாத இணையத்தமிழர்கள் இல்லையென்று ஆகியிருக்கிறது.

ஆட்கள் இணையச் சமூக வலையமைப்புக்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணங்கள் பல்வேறு தளங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏராளம் ஆய்விலக்கியங்களும் இது தொடர்பாகக் கிடைக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், மற்றவர்களுடன் தொடர்பாடுதல், வாழ்க்கையில் சிறு சிறு சுவாரசியங்களை ஏற்படுத்தல், பலரோடும் எம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளல், எமது இரசனைகளைத் திறமைகளை பலர் மத்தியில் வெளிப்படுத்தல் போன்றவற்றுக்கான இடமாகச் சமூக வலையமைப்புத்தளங்கள் காணப்படுகின்றமை இவை மீதான தீராத ஆர்வத்துக்கு காரணமாகின்றன.

வலைப்பதிவுகளில், Facebook இல் எல்லாம் இந்த "சமூக வலையமைப்பு அனுபவ"மும் எம்மை ஈர்த்து வைத்திருக்கும் முதன்மைக்காரணி.

மனமகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பயன்மிக்க "சமூக வலையமைப்பு அனுபவம்" விக்கிபீடியாவிலும் கிடைக்கிறது.

இதனை அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு அது புரியும்.


விக்கிபீடியாவின் செயற்பாடுகளின் அடிப்படையாக இழையோடும் சனநாயகத்தன்மையும், மற்றவரை மதிக்கும் பண்பும் இந்த விக்கிபீடியாச் சமூக வலையமைப்புக்கு மனமகிழ்ச்சிதரும் தன்மையை வழங்குகிறது.

விக்கிபீடியாவின் பயனர் பேச்சுப்பக்கங்களிலும் ஒவ்வொரு கட்டுரைகளின் உரையாடற்பக்கங்களிலும் ஆலமரத்தடியிலும் விக்கிபீடியர் சமூகம் உரையாடுகிறது.

வெறும் உரையாடல் அல்ல, கூடித்தொழில் செய்துகொண்டு செய்யும் ஆரோக்கியமான பணியொன்றைச்சார்ந்த உரையாடல் அது.

முதற் பயனர் பெயரை உருவாக்கி முதற்கட்டுரை போட்ட உடனே பலகாரத்தட்டுடன் உங்களை வரவேற்பதில் அந்த "சமூக வலையமைப்பு அனுபவம்" தொடங்குகிறது.

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் உங்கள் ஆர்வத்துக்குரிய பரப்பை கட்டாயம் இனம் காட்டும். அந்தப்பரப்பில் ஆர்வமுள்ள மற்றய விக்கிபீடியர்கள் உங்களுடன் தொடர்பாடத்தொடங்குவர். படிப்படியாக அது ஏனைய விக்கிபீடியர்களுடனான தொடர்பாடலாய் விரிந்து புதிய நண்பர்களும் பயன்மிக்க தொடர்புகளுமாய் வியாபகம் கொள்ளும்.

உங்கள் பயனர் பக்கம் உங்கள் ரசனைப்படி நீங்களே வடிவமைத்துக்கொள்ளத்தக்க ஓர் அருமையான profile page. அதன் உரையாடற்பக்கம் நீங்கள் அன்றாடம் ஆர்வத்துடன் பார்க்கத்தூண்டும் மற்றவர்கள் உங்களோடு உரையாடும் "Wall".


அண்மைய மாற்றங்கள் பக்கம் ஒவ்வொரு மணித்தியாலமும் உங்களைத்தன்பக்கம் ஈர்த்துப் பார்க்கத்தூண்டும் சுவாரசியமான Social News Feed.

பங்களிக்கப் பங்களிக்கத்தான் நீங்கள் அந்த அனுபவத்தின் ஆழத்தை நோக்கிச் செல்வீர்கள்.

ஏனைய சமூக வலையமைப்புத் தளங்களில் உங்கள் சொந்த விபரங்களை, ரசனைகளை காட்சிப்படுத்தி உரையாடுவீர்கள்; விக்கிபீடியாவில் உங்களால் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியக் கட்டுரை ஒன்றை முன்னிறுத்தி உரையாடுவீர்கள்.

இந்த விக்கிப்பீடியா இணையச்சமூக வலையமைப்பின் மூலம் உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் நண்பர்கள் இணையத்தில் உறுதியான பணிகளைச் செய்யும் ஆர்வத்துடன் வந்தவர்களாக இருப்பர்.

நண்பர்களுடனான அரட்டை, பொழுதுபோக்கினூடு நீங்கள் நின்று நிலைக்கக்கூடிய சமூகப்பணி ஒன்றையும் செய்துகொண்டு செல்வதே இங்கே இருக்கும் முதன்மை வேறுபாடு.

உங்கள் கட்டுரை மற்றவர்களால் திருத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுச் செல்வதையும், மற்றவர்களுடைய கட்டுரைகளை நீங்கள் திருத்தி, மேலதிக தகவல்களைத் தேடிச்சேர்த்து அக்கட்டுரை வளர்ந்து செல்வதையும் பார்ப்பது இனிய அனுபவம். இதனை Facebook Farming இற்கு ஒப்பிடலாம்.

இணையத்தில் மட்டுமல்லாது இந்தச்ச்மூக வலையமைப்பு தரையிலும் விரியும் இயல்புள்ளது.

விக்கிபீடியா அறிமுகக்கூட்டங்களை, நிகழ்ச்சிகளைச் சிறியளவில் நடத்துவது.
விக்கிப் பட்டறைகளைச் சேர்ந்து நடத்துவது,

விக்கிபீடியர் சந்திப்புக்களைச் சிறு தேனீர் விருந்துடன் ஒழுங்கமைப்பது,
மற்றவர்களுக்கு விக்கிக்கு பங்களிக்கும் வாய்ப்புக்களை விளக்குவது என்று தரையிலும் மகிழ்ச்சியுடன், மதிப்புடன் சமூகத்தின் வலையமைப்பில் இணையும் வாய்ப்பினையும் விக்கிபீடியா வழங்குகிறது.

பல்வேறு சமூக வலையமைப்புத்தளங்களிலும் மற்றவர்களோடு கலந்து இன்புறுபவர்கள், மாறுபட்ட, வேறான அனுபத்தைத்தரக்கூடிய விக்கிபீடியா எனும் சமூக வலையமைப்பிலும் இணைந்து பாருங்கள்.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மிக அருமையான கட்டுரை, மயூரன். மாறுபட்ட பார்வை. ஆனால், முற்றிலும் உண்மை. orkut, faceboo, twitter எல்லாம் வரும் முன்னேயே விக்கி எப்படி ஒரு சமூக இணையத்தளமாகத் தொடங்கி இருக்கிறது என்பதை எண்ண வியப்பாக இருக்கிறது. விக்கிப்பீடியர்களுக்கு ஏன் விக்கிப்பித்து பிடிக்கிறது என்றும் புரிகிறது :)

விக்கி ஒரு சமூக வலையமைப்பு மட்டுமல்ல சமூகத்துக்கு நன்மை பயக்கும் வலையமைப்பும் கூட.

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு...பகிர்வு.பூங்கொத்து!

Post a Comment